Wednesday, September 20, 2023

வேந்தன் ஆன்மா

 பண் அமைத்த பாணர்க்கு பொன் கொடுத்தான். 

புண்பட்ட கன்றுக்கு தன் புதல்வனை கொடுத்தான்.


தன் காலம் தாண்டி தமிழ் வாழ கனி கொடுத்தான்.

தொண்டாற்றி தமிழ் பண்பாட்டை உயர்த்தி பிடித்தான்  


கோட்டாலே 3 நாடாக பிரிந்து இருந்தாலும் - தமிழ்க்  

கோட்பாடால் இணைந்தே இருந்தான். 

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் கேட்க 

வெண்பாக்கள் திரட்டி சங்கம் அமைத்தான். 


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வந்த தமிழ் - இன்று 

கல் மறைந்தும் மண் மறைந்தும் கான்கிரீட்டால் புவி நிறைந்தும்  

மரிக்காமல் மறையாமல் நெடுங்காலம் உடன் வாழ 

அன்றே வழி அமைத்தான், உயிர்கொடுத்தான் தமிழ் வேந்தன் 


மண்ணில் தான் மறைந்தாலும், மொழி 

விண்ணை தொட வேண்டுமென அவன் 

கண்ணாக கருத்தாக வளர்த்த தமிழ் இன்று 


நம் வாயில் படும்பாட்டை கண்டாலோ கேட்டாலோ 

வெம்பாமல் இருக்காதோ வேந்தன் ஆன்மா 


ப்ரோ வாக ஜீ ஆக நாம் மாற நாம் மாற 

தோழா-வும், நண்பாவும், காணாமல் தான் போகும்

தேங்க்ஸ் சொல்லி தேங்க்ஸ் சொல்லி நாம் பேச 

நாளாக நாளாக நன்றியும் மறந்து போகும் 

 

நாலடியும் ஈரடியும் நாளடைவில் அழிந்து போக 

"கீழடியில் கிடைத்த"தென இன்றைய தமிழ் ஆய்விடுமோ.


கூடாது கூடாது விழி தமிழா! நினைவில் கொள். 


சந்திராயன் வென்றாலும் நாம் புதன்வாசி ஆனாலும் 

'என் வாழ்வும் என் வளமும் மங்காத தமிழ்' என்று 

அன்றாடம் உரையாடு. எந்நாளும் தமிழ் புகழ் பாடு.

1 comment:

  1. சிறப்புப் பதிவு.
    விழிப்புணர்வு உருவாக்க
    நல்ல முன்னெடுப்பு.
    பாராட்டுகள் ஜீவன் ஐயா

    ReplyDelete