Tuesday, April 9, 2024

ஆயிரத்தில ஒருவன்



முன்கதை:


இது ஆயிரத்தில ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம்.

வரலாற்று வல்லுனர்கள் சோழவம்சத்தின் வாரிசுகளை ஒரு தீவிலிருந்து கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள்.

தஞ்சை பற்றி தன் மூதாதையர்கள் மூலம் பல செய்திகளை கேட்டறிந்த அவர்களை தஞ்சைக்கு அழைத்து வரும் தூதுவன்  நம்ம கவுண்டமணி.

 


காட்சி: ஒன்று
 

இடம்:  தஞ்சை கோவில்

 

கதாபாத்திரங்கள் : கவுண்டமணி, செந்தில், இளவரசிகள் அங்கவை, சங்கவை, குந்தவை, அர்ச்சகர், சாமி கும்பிடும் பெண்

 

 

கவுண்டமணி

(இளவரசிகளை பணிவுடன் அழைத்து வருகிறார்)..வாங்க இளவரசிகளே வாங்க....வாங்க....

 

செந்தில்

(அதிசயத்துடன்) அண்ணே?

 

கவுண்டமணி

டேய் செந்தில்… பாத்து எவளோ நாளாச்சி.. இங்க என்னடா பண்ற?

 

செந்தில்

நீங்க தானே சொன்னீங்க.. என் வாக்கியத்த தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல வெட்டி வெச்சிட்டு பக்கதுலயே உக்காந்துக்க ன்னு.. அதான் இங்கயே செட்டில் ஆய்ட்டேன். யாரு ண்ணே இவங்கல்லாம் ?

 

கவுண்டமணி

இவங்க சோழ இளவரசிகள் டா.. தஞ்சாவூர் சுத்திக் காட்ட கூட்டிட்டு வந்திருக்கேன். இது அங்கவை

 

செந்தில்

(கையில் இருக்கும் பையை) இத அங்க வைக்கவா ?

 

கவுண்டமணி

(செந்திலிடம்) ரொம்ப லொள்ளு பேசாத… இவங்க பேர் அங்கவை. இது சங்கவை, அது குந்தவை.. (இலவரசிகளிடம்)  இளவரசிகளே இதான் தஞ்சை…

 

குந்தவை

வந்துவிட்டோமா? ஆஹா… ஆஹா…தஞ்சை…. தஞ்சை..  என் தந்தை கனவு நிறைவேறியது. நான் சோழ மண்ணில் கால் பதித்து விட்டேன். தூதனே.. நாம் இப்போது எங்கிருக்கிறோம்?

 

கவுண்டமணி

இதாங்க  தஞ்சை பெரிய கோவில். மொதமொதல்ல ஊருக்கு வந்திருக்கீங்க.. சாமி கும்பிட்டுட்டு நம்ம டூர் அ ஆரம்பிக்கலாம்.  செந்தில் நீயும் கூட வா..

அங்கவை

ஆஹா.. முதலில் மகேஸ்வரன் தரிசனம்.. பிறகு மக்கள் தரிசனமா? அருமை. அருமை.

 

(சாமி கும்பிடுகிறார்கள்)

பெண்

அர்ச்சகரிடம்) சாமி அர்ச்சனை பண்ணனும்.

அர்ச்சகர்

யார் பேருக்கு?

பெண்

சாமி பேருக்கு

அர்ச்சகர்

எந்த சாமி  ப்பா?

பெண்

நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேருக்கு

கவுண்டமணி

(சத்தமாக) அடேய்…(நார்மல் சத்தத்துடன்)  உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா ? அவ்ளோ பெரிய மம்மியே கம்முன்னு போய் சேந்துடுச்சு… இந்த டம்மிங்களுக்கு ஏன் இந்த விளம்பரம்?  ரொம்ப லொள்ளு பண்ணாத.. ஒழுங்கா சாமி கும்பிட்டுட்டு அப்டியே ஓடி போய்டு

சங்கவை

என்ன இங்கே சச்சரவு?

கவுண்டமணி

ஒன்னுமில்லைங்க .. இங்க கொசுத் தொல்லை தாங்க முடியல நீங்க வாங்க போலாம்.

 

காட்சி: இரண்டு

இடம்:  காவிரி கரையில்

கதாபாத்திரங்கள் : கவுண்டமணி, செந்தில், இளவரசிகள் அங்கவை, சங்கவை, குந்தவை, FB போராளி

குந்தவை

தூதனே! இந்த மணல் பரப்பிற்கு எதற்கு எங்களை அழைத்து வந்திருக்கிறாய்?

செந்தில்

இதாங்க காவிரி ஆறு

அங்கவை

ஆறா? ஆற்றில் தண்ணீர் தானே ஓட வேண்டும். இங்கே தண்ணீ வண்டி அல்லவா செல்கிறது?

கவுண்டமணி

மழையே இல்லைங்க.. மணல் அள்ளறது தான் இப்போ ஆத்துல நடக்குது. நல்ல பிசினஸ்..

சங்கவை

மாதம் மும்மாரி மழை பெய்யவில்லையா ?

கவுண்டமணி

எங்க ? மத்த மாரிங்க எல்லாம் நாட்ல இருக்கும்போது மும்மாரி க்கு எங்க போறது?

குந்தவை

அணைகள் கட்டி இருக்கலாமே ?

கவுண்டமணி

உங்க கொள்ளுத் தாத்தா கரிகாலர் கட்டின கல்லணை யோட சரிங்க.. அணை கட்றது எல்லாம் ஓல்ட் பேஷன். தெர்மாகோல் போடறது தாங்க நியூ பேஷன்

அங்கவை

அப்படியென்றால் விவசாயம் ?

கவுண்டமணி

அது படுத்து பல நாளாச்சி

குந்தவை

அய்யகோ.. எட்டும் திசையும் புகழும் வண்ணம்  எல்லா வளமும் பெற்று, வந்தாரை வரவேற்று விருந்தளித்து உபசரித்த எங்கள் தஞ்சை, இன்று தண்ணீர் இன்றித் தவித்துக்கொண்டிருக்கிறதா? ஏன் இந்த நிலைமை?

கவுண்டமணி

காரணம் கேக்காதீங்க.. எல்லாம் அரசியல்…

குந்தவை

தண்ணீர் கேட்டு தன்மான தமிழன் பொங்கி எழவில்லையா?

கவுண்டமணி

நீங்களே கேளுங்க.. யப்பா தன்மான தமிழர்களே? (FB போராளிகளிடம்)  ஏம்பா….இந்த காவேரி தண்ணி வரலையே.. அதுக்கு என்ன பண்ணீங்க ?

FB போராளி

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க ? போராட்டம்.. கடையடைப்பு, மறியல்…...

குந்தவை

இவ்வளவும் செய்தீர்களா ?

FB போராளி

பண்ணோமே .. Facebook ல..கொறஞ்சது ரெண்டு ஸ்டேடஸ் ஆவது போட்டேனே..

FB போராளி

உணமையான தமிழனா இருந்தா இத ஷேர் பண்ணு’ ன்னு ணா நிறைய மீம்ஸ் போட்டேன்

கவுண்டமணி

(இளவரசிகளிடம்) இதாங்க இவங்க பண்ற போராட்டம் . வீட்லயே ஒக்காந்துகிட்டு நோகாம நோம்பு கும்பிடறது..

அங்கவை

அடக் கடவுளே.. எம் மக்களுக்கு என்ன ஆயிற்று?

செந்தில்

இன்னும் நீங்க பாக்க வேண்டியது நிறைய இருக்கு வாங்க.

 

காட்சி: மூன்று

இடம்:  ஒரு சந்தடி மிகுந்த தெருவில்

 

கதாபாத்திரங்கள் : கவுண்டமணி, செந்தில், இளவரசிகள் அங்கவை, சங்கவை, குந்தவை, அரசியல் ஆர்வலர் 1, அரசியல் ஆர்வலர் 2, அ. ஆர்வலர் 3,
அ. ஆர்வலர்  4, அ. ஆர்வலர்  5, அ. ஆர்வலர்  6, கருத்து சொல்பவர்

 

 

அங்கவை

ப்பாஎன்ன வெயில்? தூதனே சிறிது தண்ணீர் கிடைக்குமா?

 

கவுண்டமணி

இருங்க கடையில  வாங்கிட்டு வரேன்…

 

குந்தவை

என்ன ? காசு குடுத்து வாங்க வேண்டுமா ?

 

கவுண்டமணி

ஏன்? bitcoin வச்சிருக்கீங்களா ? பெட்டி கடைல அதெல்லாம் வாங்க மாட்டாங்க.

 

குந்தவை

அதில்லை. தண்ணீர் தானே? கேட்டால் ஒரு குடுவையில் தரமாட்டார்களா?

 

கவுண்டமணி

உங்களுக்கு குடுத்துட்டு அவன் என்ன பண்ணுவான் ?

 

அங்கவை

அருகில் கண்மாய், அகழி எதுவும் இல்லையா ?

 

கவுண்டமணி

கண்மாய், அகழி யா ? நாட்ல ஏரி, குளமே தண்ணி இல்லாம குப்பமேடா வச்சிருக்கோம். அதயே தூர் வாராம வச்சிருக்கோம்.

 

குந்தவை

ஏன் தூதனே? இந்த அவல நிலைக்கு ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லையா?

 

கவுண்டமணி

அத தெரிஞ்சிக்கணுமா? பக்கத்துல டீக்கடை இருக்கு பாருங்க.. அங்க வெட்டி பசங்க அரசியல் பேசிக்கிட்டு இருப்பாங்க.. அவங்க கிட்ட கேப்போம்.  

 

செந்தில்

(அரசியல் ஆர்வலர்களிடம்) ஏங்க? இந்த தண்ணி பஞ்சத்துக்கு என்னங்க பண்றது ?

 

அ. ஆர்வலர்  1

ஆமாங்க.. எல்லாம் ஆட்சில இருக்குறவங்கள சொல்லணும்..

 

குந்தவை

அவர்களிடம் சொல்லவேண்டியது தானே? மக்களை காப்பாற்றுவது அவர்கள் கடமையல்லவா?

 

அ. ஆர்வலர்  2

நல்லா காப்பாத்துவாங்க. அம்மா இருந்த வரைக்கும் பதவிய காப்பாதிக்கிட்டாங்க…  சின்ன அம்மா வந்ததும் உயிர காப்பாதிக்கிட்டாங்க… இப்போ கட்சிய காப்பாத்த தான் அவங்களுக்கு நேரம் இருக்கு

 

அ. ஆர்வலர்  1

ஏன்? உங்க செயல் தலைவர் என்ன பண்றாரு?

 

அ. ஆர்வலர்  2

நீதி கேட்டு நெடிய பயணம் புறப்பட்டு போயிக்கிட்டு இருக்காரு

 

அ. ஆர்வலர்  1

அப்படியே போயிட சொல்லு.. நாடு உருப்படும்

 

அ. ஆர்வலர்  3

அவிங்க அப்டிதான்.. (இளவரசனிடம்)..சார்... மையத்துல சேர்ந்துக்குரீங்களா?

 

அ. ஆர்வலர்  4

(அ. ஆர்வலர்  3 இடம்) கயா ரே? செட்டிங் கா?  (இளவரசனிடம்)..நீங்க வாங்க சார்.. நாம ஆன்மிக அரசியல் பண்ணலாம்.

 

செந்தில்

(பயத்துடன்) அண்ணே

 

கவுண்டமணி

என்னடா பண்றது. .. பைத்தியங்க கிட்ட வந்து மாட்டிகிட்டோம்

 

சங்கவை

ஏன் தூதனே?இந்த’ அரசியல்வாதிகள் சரியில்லை என்றால் இதற்கு மேல் ஒரு பெரிய அரசியல்வாதி  யாரேனும் இருப்பார்களே?

 

கவுண்டமணி

யாரு?? (யோசித்து)

 

அ. ஆர்வலர்  5

(கையில் இருக்கும் போனில் இருந்து ஒலி வருகிறது) (மித்த்ரோன்.. ஹமாரா தேஷ் ஹேய்…. மந்திர் ஹேய்..)

 

கவுண்டமணி

ஓ… அவரா?

 

சங்கவை

இருக்கிறாரா ? அவரை பார்க்கலாமா ?

 

கவுண்டமணி

ஓ பாக்கலாமே… (வானை நோக்கி).. அதோ ஒரு விமானம் ஜோடி புறா மாதிரி ஜோய்ங்ன்னு போகுதுல்ல… அதுல இருக்காரு.. நல்லா பாத்துக்கோங்க

 

அங்கவை

கீழே வரமாட்டாரா ?

 

கவுண்டமணி

அவருக்கு ஊரூரா சுத்த தான் நேரம் இருக்கு.. அவர் இருக்கற ஊர்லயே நம்ம தமிழக விவசாயிங்க போராட்டம் பண்ணாங்க.. அவர் எட்டி கூட பாக்கல

 

அ. ஆர்வலர்  5

ஏன் 60 வருஷமா ஆட்சில இருந்தாங்களே அவங்கள கேளுங்க

 

அ. ஆர்வலர்  6

ஏன் இப்போ ஆட்சியில நீங்க தானே இருக்கீங்க.. என்ன பண்ணீங்க ?

 

அ. ஆர்வலர்  4

கேள்வி கேட்காதீங்க சார்.. யூ ஆர் ஆண்டி இந்தியன்

 

 

(ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள் )

 

குந்தவை

(உரத்த குரலில்) போதும் நிறுத்துங்கள்

 

குந்தவை

(வான் நோக்கி) என் முன்னோர்களே… இரண்டு நாட்கள் இந்த ஊரை சுற்றி பார்த்துவிட்டேன்.  இதுவா நீங்கள் எனக்கு சொல்லி அனுப்பிய தஞ்சை? இதுவா நம் மக்கள்? தஞ்சை என்றால் தண்ணீர் நிறைந்த ஊர் என்று சொல்லிக் கொடுத்தீர்களே? இங்கே தண்ணீரும் இல்லை. மக்களிடையே ஒற்றுமையும் இல்லை. ‘சோழநாடு சோறுடைத்து’ என்று பெருமை பேசினீர்களே.. இங்கே ஊருக்கே சோறுபோடும் விவசாயிக்கு விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை.. என்ன சொல்வது இந்த கொடுமையை? (இளவரசிகள் நடக்க ஆரம்பிகிறார்கள்)

 

கவுண்டமணி

அம்மா.. எங்க போறீங்க?

 

குந்தவை

நாங்கள் எங்கள் தீவிற்கே சென்று விடுகிறோம்.

 

கவுண்டமணி

அங்க சோறு தண்ணீ இல்லாம கஷ்டப்பட்டிங்களே

 

குந்தவை

இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்? இன்னும் சில வருடங்களில் இந்த தஞ்சையும் பாலைவனம் தான்.

 

 

(பாடல் ஒலிக்கிறது) (இளவரசிகள் நடக்கிறார்கள்) நெல்லாடிய நிலம் எங்கே? சொல்லாடிய அவை எங்கே? வில்லாடிய களம் எங்கே? கல்லாடிய சிலை எங்கே ?  

 

 

>>>>FREEZE<<<<

 

கருத்து சொல்பவர்

இங்கே நீங்கள் பார்த்தது வெறும் பொழுதுபோக்கிற்கு அல்ல. உங்கள் சிந்தனைக்கு.

கரைப்புரண்டு ஓடியது காவேரி.. இன்று தண்ணீருக்காக அண்டை மாநிலத்தவரிடம்  கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்  மூன்று போகம் விளைந்து விளை நிலங்களாய் இருந்தது இந்த பூமி.. இன்று விவசாயம் மலிந்து, விலை நிலங்களாக மாறியுள்ளது. ஆற்று நீரிலும் ஊற்று நீரிலும் விவசாயம் செய்து வளம் கொழித்த நிலத்தில், ஆயிரம் அடி போர் போட்டும் தண்ணீருக்கு வழியில்லை.இதில் ‘எரியும் தீயில் எண்ணை ஊற்றுவது போல்’ மீத்தேன், கூடங்குளம், நியூட்ரீநோ, ஹைடுரோகார்பன், கெயில், ஸ்டெர்லைட்
என அனைத்தும் தமிழ் நாட்டில். ஊர் வாழ கலப்பை ஏந்திய உழைப்பாளிகளின் கைகள், அரசாங்க நிவாரண நிதியை  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலை மாற வேண்டும்.

நாம் அயல் நாட்டில் தானே இருக்கிறோம். நம்மால் என்ன செய்ய முடியும்’ என்று தானே நினைகிறீர்கள்? தமிழ் நாட்டில் வாழும் உங்கள் சொந்தங்களுக்கு சொல்லிக் கொடுங்கள். ‘மழை நீர் சேமிக்க சொல்லுங்கள். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கச் சொல்லுங்கள, இயற்கை விவசாயத்தை ஆதரிக்க, சிறு தொழில் புரிவோரிடம் பேரம் பேசமால் பொருள் வாங்க சொல்லுங்கள., ஏரிகளை தூர்வார முன் வர சொல்லுங்கள், தண்ணீர் செலவை குறைக்க சொல்லுங்கள் ’ நீங்களும் பின்பற்றுங்கள்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு, வருங்கால சந்ததியை நினைத்து, சிந்தித்து செயல்பட்டால், நம் தஞ்சையின், நம் தமிழ்நாட்டின் பழம்பெருமையை நிலை நாட்டலாம்

தமிழன் என்று சொல்லடா!.. தலை நிமிர்ந்து நில்லடா!